Total Pageviews

Monday 20 January 2014

TAMIL ARTICLES


அன்பு
அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என 4 மாணவிகளை ஆசிரியர் அனுப்பினார்.  ஒரு மாணவியின் கையில் பூச்சி இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணப் பறவை இருந்தது. முதலில் கிளம்பிப்போன மாணவி கடைசியில் வெறுங்கையுடன் திரும்பினாள். ஏன் இப்படி வெறும் கையுடன் வருகிறாய் என கேட்ட போது அந்த மாணவி பதில் கூறினாள்.
நானும் மலரைப் பார்த்தேன் அழகாய் இருந்தது, செடியிலேயே இருக்கட்டும் என விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன் அழகாய் இருந்தது சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என விட்டு விட்டேன். குஞ்சுப் பறவையை பார்த்தேன் தாய்ப் பறவை தேடுமென்று விட்டுவிட்டேன், என அந்த மாணவி பதில் கூறினாள். இது தான் அன்பு என அந்த மாணவியை ஆசிரியர் பாராட்டினார்.
நன்றி.

கான்பிடன்ஸ் கார்னர்.

கல்வி
இன்றைக்கு மாணவர்கள் வகுப்பறைக்கு சென்று தங்களது வருகையை பதிவு செய்கிறார்கள். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்கள் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். இன்றைக்கு மாணவர்கள் டிகிரி பட்டம் பெற வேண்டும் என விரும்புகிறார்கள். இன்றைய உலகம் பெரும் தொழில்நுட்ப மாற்றத்தை பெற்று இருக்கிறது.
டிகிரி பட்டம் என்பது மாணவர்களில் திறனை மதிப்பிடும் கருவியாக இருக்கிறது. பெறும் டிகிரியை மட்டும் பெற்றிருந்தால் வேலை கிடைத்துவிடும் என்பது அரிதாக இருக்கிறது. மாணவர்கள் பல்வேறு திறனையும் பெற வேண்டியுள்ளது. கல்வி மற்றும் வேலை முடிவுகளை நிர்ணயிக்கும் போது, அவர்களது பெற்றோர்கள் கூறுவதை சார்ந்தே இருக்கிறார்கள். அதனைப் போன்று கல்லூரி ஆசிரியர்கள் கூறும் வழியிலேயே மாணவர்கல உயர்கல்வி, வேலையைத் தேடுகிறார்கள். ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆதிக்கத்தால் மாணவர்கள் தாங்கள் விரும்பும் துறையை கல்வியிலோ, வேலை வாய்ப்பிலோ பெற முடியாத நிலை உள்ளது.
மாணவரிகள் படிக்கும் கல்வியில் தாங்கள் விரும்பாத துறையை தேர்வு செய்யும் போது அதில் தடை ஏற்படுகிறது. எனவே மாணவர்கள் தாங்கள் படிப்பை நேசிப்புடன் படிக்க வேண்டும். இந்தியாவில் 125 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் 60 சதவீத்த்திற்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்களாக உள்ளனர். மாணவர்கள் ஒழுங்கு முறையில் கவனமாக இருக்க வேண்டும்.
*********************
எ.டி.எம்களில் பணம் திருடும்
முயற்சியை தடுக்கும் தொழில்நுட்பம்

எ.டி.எம் களில் பணம் திருடும் கும்பல் இனிமேல் பணத்தை எடுத்துக் கொண்டு ஓட முடியாது. திருடர்கள், பணத்தை திருட முயற்சித்தால் ஏ.டி.எம்களில் உள்ள பணம் சேதம் அடைந்துவிடும். திருடர்கள் பணத்தை திருட முயற்சித்தால் எந்திரத்தில் இருந்து மை திடீரென வெளியே வரும்.
அந்த மை திருடர்கள் மீதோ அல்லது எடிஎம்களில் உள்ள பணத்தின் மீதோ படிந்துவிடும். இதனால் திருட முயற்சிக்கும் பணத்தை கண்டு பிடிப்பதற்கு அது உதவியாக இருக்கும் விஞ்ஞானிகள் இந்த திருட்டு தடுப்பு தொழில் நுட்பத்தை பாம்பார்டியர் வண்டின்( Bombardier beetle) தற்காப்பு நடவடிக்கை முறையில் இருந்து கண்டு பிடித்து இருக்கிறார்கள். தன்னை தாக்குபவர்கள் மீது இந்த வண்டுகள் கொதிக்கும் அமில வாயுவை செலுத்துகின்றன. இதற்கு அந்த வண்டு இரண்டு ரசாயனங்களை பயன்படுத்துகிறது. ஒன்று ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றொன்று ரசாயனம் ஹைட்ரோ குயினோன் ஆகும்.
இந்த ரசாயனங்களும் அந்த வண்டின் வயிற்றின் தனி அறைகளில் சேமிக்கப்பட்டு உள்ளது. இந்த இரு ரசாயனமும் கலக்கும் போது வெப்பம் உருவாகி அந்த திரவங்களை ஆவியாக்குகிறது.

****************************
வெற்றி நிச்சயம்
இன்றைக்கு பல மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடங்குகிறார்கள். அதாவது அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ‘கல்வி’ Education- அது மிகப்பெரிய நிகழ்வு. அதற்கு முன்னால் நான் ஒரு வினாவைக் கேட்கிறேன்.
       காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து, தூய ஆடை உடுத்தி, காலணியை அணிந்து பள்ளிக்குப் புறப்படுகிறோம். இதெல்லாம் எதற்கு? பத்தாம் வகுப்பில் 500/500 மதிப்பெண் பெறவா? இல்லை பன்னிரண்டாம் வகுப்பில் 1200/1200 மதிப்பெண் பெறவா? அதையும் தாண்டி பொறியாளர் படிப்புக்கா? இல்லை மருத்துவப் படிப்புக்கா? இல்லை இலட்சக்கணக்கில் மாத ஊதியம் பெறுவதற்கா?
                           இதெல்லாம் அல்ல.....
                           ஒரு மாணவனின் அறிவு விரிவடைவதற்காக !...
                    அவன் வாழ்வில் வெற்றி பெறுவதற்காக.....
                    அவன் முன்னேற்றம் அடவதற்காகத் தான்.
                           அறிவு விரிவடைவதற்கு..... 

        இன்றைய குழந்தைக்கு அறிவு என்பது மிகவும் தாராளமான நிலையில் உள்ளது. ஒரு கட்டிடத்தைப் பார்த்தால் உங்களுக்கு ஐந்து அபிப்ராயம் தோன்றினால் அவர்களுக்கு ஐந்நூறு அபிப்ராயம் தோன்றும்.
       அவர்கள் பெரியவர்களா? இல்லை நீங்கள் பெரியவர்களா? ஆகவே, கல்வி என்பது மிகக் குறுகியதல்ல.
வெற்றி....
       வெற்றி என்பது மூன்றெழுத்துச் சொல். அதை அடைய வேண்டுமென்றால் வாழ்க்கையில் வெறி இருக்க வேண்டும். ஒருவன் வெற்றி பெற்ற பிறகு கைதட்டினால் அது பாராட்டு அல்ல; இவனால் வெற்றி பெற முடியும் என்று கைதட்டுவதுதான் உண்மையான பாராட்டு. அந்தப் பாராட்டை அனைத்து மாணவர்களும் பெற்றோர்களிடம் இருந்து தான் எதிர்பார்க்கிறார்கள்.
       ஒரு வீட்டில் ஒரு குழந்தையை, “ நீ படிக்கமாட்ட எதுக்குமே லாய்க்கில்லஎன்று பெற்றோர் கூறினார்கள் என்றால் அக்குழந்தை எப்படிப் படிக்கும்? உங்கள் குழந்தையை நீங்கள் தான் உற்சாகப்படுத்த வேண்டும். அவன் தடுக்கி விழும் பொழுது உங்கள் கைகளைக் கொடுத்து அவனை மேலே எழுப்ப வேண்டும்.
எப்படியாவது மார்க் எடு, இல்ல அவ்ளோதான்!’ என்று சொல்வதை நிறுத்துங்கள்.
உன்னால் படிக்க முடியும், இந்த நாட்டை உயர்த்த முடியும் என்று சொல்லிப் பாருங்கள் அவன் தானாகப் படிப்பான்.
       ஒரு குழந்தை பெற்றோரை நம்பும் அளவிற்கு யாரையும் நம்பாது. உங்களுக்கு நினைவு இருக்கிறதாசிறுவயதில் ஒவ்வொருவரின் தந்தையும் அவர்கள் குழந்தைக்கு வேடிக்கை காட்டுவார்கள். குழந்தை சிரித்துக் கொண்டே மேலே போகும்...! ஏன்? கீழே இருக்கும் தன் தந்தை எப்படியாவது பிடித்து விடுவார் என்ற நம்பிக்கையில் தான். இந்த நம்பிக்கை கடைசி வரை நிலைக்க வேண்டுமா? பெற்றோர்களே! உங்கள் கைகளில்தான் உள்ளது.
       வீடுகளெல்லாம் பள்ளிகளாக மாற வேண்டும் பெற்றோர்களெல்லாம் ஆசிரியர்களாக மாற வேண்டும். இலட்சக்கணக்கில் சம்பாதிக்க வீட்டை IT Company’ ஆக மாற்றாதீர்கள்.. குழந்தையையும் சம்பாதிக்கும் நபராக நடத்தாதீர்கள்.
முன்னேற்றம்....
முன்னேற்றம் என்றால் என்ன? மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெறுவதா? இல்லை விளையாட்டுத் துறைகளில் முத்திரை பதிப்பதா? கை நிறைய வருவாய் ஈட்டுவதா? இல்லை ..... முன்னேற்றம் என்பது அனைத்தையும் குறிக்க வேண்டும். ஒருவன் அனைத்துத் துறையிலும் முன்னேறினால்தான் அது முன்னேற்றம்.
இன்று ஒரு வீட்டில் ஒரு குழந்தை தான். அக்குழந்தையே அனைத்துத் துறையிலும் முத்திரை பதிக்க வேண்டிய கட்டாயமும் எழுந்துள்ளது. அதனால் உங்கள் ஆசையை அவர்கள் மேல் திணிக்காதீர்கள்.
அவன் ஆசைக்கனவை நிறைவேற்றுங்கள் நீங்கள் உலகத்திற்கு அடையாளம் கூறலாம். இப்படிப் பெற்றோரையே குறை கூறுகிறேன் என்று எண்ண வேண்டாம். நம்(மாணவர்கள்) மீதும் குற்றம் உண்டு. கடினப்பட்டு உழைத்து நம்மைப் புகழ் பெற்ற சி... பதின்மப் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள் நம் பெற்றோர்கள். காரணம் தன் மகனும், மகளும் மாநிலத்திலே நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக. அவர்கள் கனவை நிறைவேற்றுவது யார்? நம்மில் சிலர் மட்டும் தானே!.
இன்றே முடிவெடுப்போம் அவர்கள் கனவை ஒவ்வொருவரும் நிறைவேற்றுவோம் என்று.... முயற்சி செய்வோம்; முத்திரை பதிப்போம்.
போட்டிகள் நிறைந்த உலகமா? இது......இல்லை
வாய்ப்புகள் நிறைந்த உலகம்............
       நீங்கள் தான் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
       ஆசிரியர்களையெல்லாம் பெற்றோர்களாய்ப் பாருங்கள்.
பெற்றோர்களையெல்லாம் ஆசிரியர்களாய்ப் பாருங்கள்
வீடுகள் பள்ளிக்கூடமாய் மாறும்.
பள்ளிக்கூடம் வீடுகளாய் மாறும்.
சந்தனக்காற்று சன்னலோரம் வீசட்டும்

---- இரா. அப்துல் ஹக்கீம்
               பத்தாம் வகுப்பு – ‘அ1
 ***************************************

வெளிப்படையாக பேசுவதால் ஏற்படும் நிலை

ஒரு நபர் வெளிப்படையாக பேசுவதால் சிலருக்கு ஆறுதல் அல்லது மனக்காயத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே எதனையும் பேசுவதற்கு முன் யோசித்து பேசுவது நல்லது. நிதானமாக யோசித்து பேசும் திறன் ஒருவரின் பக்குவ நிலையை எடுத்து காட்டுகிறது. பேசுவதில் கடைப்பிடிக்கும் நிதானத்தைக் காட்டிலும் எழுத்தில் மிகுந்த கவனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இப்படி நிதானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் வாழ்க்கையை கவனமாக நடத்தும் பக்குவத்தை பெற்று விடுகிறார்கள். சில விஷயங்கள் கசப்பான உண்மைகளை கொண்டிருக்கலாம். அவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது. மற்றவர்களுக்கு துன்பம் தராத உண்மைகளைப் பேசுவதால் எந்தப் பிரச்சனையும் இல்லை. வெளிப்படையாக ஒருவர் பேசுவது, அவரின் நாணயத்தை எடுத்துக்காட்டுவதாக இருக்கும்.
அதேப்போன்று மற்றவர்களின் மன நிலையை அறிந்து கொண்டு பேசுவதும் நல்ல விஷயமாகும். இதனால் பேச்சுவார்த்தையின் போது, இருவரும் காயப்படாமல் இருக்கலாம்.
**************************************************

பொதுத்தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு

ப்ரீ போர்டு (Pre-board) தேர்வுகளை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. போர்டு தேர்வுகளை நாம் எப்படி எழுதப்போகிறோம் என்பதற்கு முன்மாதிரியாக ப்ரீ- போர்டு தேர்வுகள் உள்ளன. மார்ச் மாதம் +2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ப்ரீ-போர்டு தேர்வு என்பது மிக முக்கியமானது நீங்கள் படித்த பாடங்களை எப்படி புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை அடையாளம் காட்டுவதாக ப்ரீ-போர்டு தேர்வுகள் இருக்கின்றன.
இந்தியா முழுவதும் இந்த +2 தேர்வு நடை பெறுகிறது. தேர்வை உரிய நேரத்தில் முடிக்க முடிகிறதா? என்பதை நிர்ணயம் செய்து தேவையான திருத்தங்கள் செய்து கொள்வதற்கு ப்ரீ-போர்டு தேர்வுகள் உதவுகின்றன.
இந்த ப்ரீ-போர்டு தேர்வுகள் உண்மையானத் தேர்வைக் காட்டிலும் கடினமானதாகவே இருக்கிறது. இந்த தேர்வை நம்பிக்கையுடன் எழுதினால்தான் போர்டு தேர்வில் பதட்டம் இல்லாமல் அதிக மதிப்பெண்களை குவிக்கும் வகையில் பதில் எழுத முடியும். எப்போதும் மனதை தளர விடாதீர்கள் ப்ரீ-போர்டு தேர்வு என்பது மாதிரித் தேர்வுதான். அதன் கேள்வி அமைப்பு உங்களை பயமுறுத்தினாலும் அதற்கு எப்படி பதிலளிப்பது என்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களது பலவீனமான நிலை எது என்பதை கண்டறியுங்கள். அதுபற்றி ஆசிரியர்களிடம் விவாதியுங்கள், நிபுணர்களிடம் விவாதியுங்கள். இப்படி அனுபவம் வாய்ந்த நபர்களுடன் பேசுவதால் உங்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கை கிடைக்கும்.
உங்களுக்கு சந்தேகம் உள்ள பாடத் தலைப்புகள் பற்றி விளக்கம் கேட்பதற்கு தயக்கம் கூடாது. அதனை, உடனடியாக களைவதற்கு, ஆசிரியர்களின் உதவியைக் கேளுங்கள். ப்ரீ-போர்டு தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு சில எளிய டிப்ஸ்கள் உள்ளன. புத்தகத்தை முழுமையாகப் படியுங்கள் அனைத்து உதாரணங்களையும் படித்து முடித்ததை உறுதிபடுத்துங்கள்.


 கேள்விகள் குறித்து உங்களது சக நண்பர்களிடம் விவாதியுங்கள். மாணவர்களுடன் கூட்டாக சேர்ந்து விவாதிப்பது நல்ல பலனைத் தரும். கடினமான கேள்விகளை எளிதாக புரிந்து கொள்வதற்கு இந்த வழிமுறை உதவும்.
உங்களுக்கு கேள்வியில் சந்தேகம் வந்தவுடன் அதற்கு தீர்வு காண்பதற்கு வழி தேட காலம் தாழ்த்தக் கூடாது. காலம் தாழ்த்துதல் என்பது நேரத்தை திருடும் திருடன் ஆகும். குறிப்பிட்ட கேள்விக்கு முழுமையாக பதிலளிக்கும் வரை பயிற்சியைத் தொடருங்கள் பாடம் சம்பந்தமாக உங்களுக்கு கிடைக்கும் ஆதார வளம் அனைத்தையும் பயன்படுத்துங்கள்.
நீங்கள் படித்த பாடங்களை மீண்டும் புரட்டி பார்த்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் தேர்வு நேரத்தில், பயம் உங்களிடம் எட்டிப்பார்க்காது. இரவில் நன்றாக தூங்குங்கள் வழக்கான பணிகளை புறக்கணிக்காதீர்கள். முந்தய ஆண்டில் கேட்கப் பட்ட தேர்வு கேள்வித் தாள்களையும் பாருங்கள். அதில் இருந்து தற்போதைய பொதுத் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படலாம்.
எந்த பாடத்தையும் மனப்பாடம் செய்யும் பழக்கத்தை கை விடுங்கள். பாடத்தை புரிந்து படியுங்கள். சூழலுக்கு ஏற்ப எப்படி பதிலளிப்பது என்பதை உணர்ந்து படியுங்கள். நீண்ட செய்முறை கேள்விகளுக்கு பதிலை தயாரான முறையில் வைத்திருங்கள் பதட்டமில்லாமல் அதனைத் தேர்வில் செய்வதற்கும் மனதைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் கேள்விகளுக்கு பதில் எழுதுவதுடன், அதற்குரிய படங்களையும் வரையுங்கள்
*********************************************
பதட்டம் தவிர்த்தால்
மாணவர்களுக்கு வெற்றி
தேர்வு எழுதும் மாணவர்கள் கீழ்க்கண்ட முறைகளை கடை பிடித்தால் போதும். அவர்களைத் தேடி வெற்றி ஓடிவரும்.
·    தேர்வு எழுதுவதற்கு முன்னர் முந்தய நாள் இரவில் பதட்டம் இல்லாமல் 7 மணி நேரம் நன்றாகத் தூங்க வேண்டும்.
·         காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
·    உடலில் நீர்ச் சத்து இருப்பதற்காக, தேர்வு எழுதுவதற்கு முன்னர் சிறிது தண்ணீர் குடித்துச் செல்ல வேண்டும்.
·  தேர்வு எழுதிய பின்னர் மனதை ரிலாக்ஸ் செய்து சிறிய அளவில் ஸ்னாக்ஸ் பொருட்கள் அல்லது மதிய உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். சிறிது நேர ஓய்விற்குப் பின்னர் படிக்க வேண்டிய பாடப் புத்தகங்களை பார்க்க வேண்டும். அப்போது ஆர்வமாக படிக்கத் தூண்டும்.
·    தேர்வு நேரங்களில் துரித உணவு (பாஸ்ட் புட்) போன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். அத்தகைய உணவுகள் தூக்க நிலையை ஏற்படுத்தலாம்.
·  வீதிகளில் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவு வகைகளை சாப்பிடுவதால் தொற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
·    வீட்டில் சமைத்த உணவையே சாப்பிடுவதால் ஆரோக்கியமான உடல் நிலையை நாம் பராமரிக்க முடியும்.
· தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் பக்க பலமாக இருக்க வேண்டும் மாணவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடாது. மாணவர்கள் தேர்வு என்றதும் ஒருவித பதட்டத்துடன் இருப்பார்கள். இந்த பதட்டத்தைத் தவிர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆதரவாக இருப்பது நல்லது.
·         தேர்வு நேரத்தில் எதனையும் புதிதாகப் படித்து அதனை உணர முடியாது. ஏற்கனவே படித்த பாடங்களை நினைவு கூறும் வகையில் அதனை திரும்பி படித்து நினைவு கூற வேண்டும்.
·        தேர்வு நேரத்தில் எந்த விதப் பதட்டமும் இல்லாமல், வழக்கம் போல, இயல்பான
மன நிலையுடன் தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும்.
இப்படிச் செய்தால் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
 *************

 சுற்றுச்சூழல் நூலகம்

தார்வாட்டில் கர்நாடக பல்கலைக்கழகம் அமைந்து இருக்கிறது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகம் இயற்கைச் சூழலில் கண்ணைக் கவருவதாக அமைந்துள்ளது. அழகானப் பூக்கள், குளுமையான காற்று மற்றும் கிரீச், கிரீச் என இனிய ஓசை எழுப்பும் பறவைகள் என இந்த பல்கலைக் கழக வளாகம் அமைந்து இருக்கிறது. இந்த இயற்கை அழகின் நடுவில் இந்த பல்கலைக்கழகத்தின் நூலகம் அமைந்து இருக்கிறது.
இத்தகைய சூழல் மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.  அழகான தோட்டத்தின் நடுவில் இந்த நூலகம் அமைந்து இருக்கிறது. இந்த நூலகம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எச்.பி வாலிகரின் சிந்தனையில் உருவானது ஆகும்.
கர்நாடக மாநிலத்திலேயே இத்தகைய சுற்றுச் சூழலுடன், இயற்கையை ரசிக்கும் வண்ணம் அமைந்திருக்கும் முதல் நூலகம் இதுவாகும். மாணவர்கள் தங்களது பாடம் குறித்து ஆலோசனை செய்வதற்கும் இந்த நூலகத்தில் வசதி வாய்ப்புகள் உள்ளன.
தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கூட இந்தச் சுற்றுச்சூழல் நூலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இயற்கையுடன் இணைந்துள்ள இந்த நூலகம், பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்தில் இருந்து  சற்று தள்ளியே அமைந்து இருக்கிறது.
நூலகத்திற்கு அருகாமையில் முதுநிலை பட்டப்  படிப்பு படிக்கும் மாணவர்களின் துறைகள் உள்ளன. பிரதான நூலகத்தை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப் படுகிறது. ஆனால் அங்கு மாணவர்கள் குழுவாக ஆலோசனை செய்ய முடியாது. நூலகத்தின் உள்பகுதியில்தான், மாணவர்கள் தங்களது பாடம் தொடர்பாக ஆலோசனை செய்ய முடியும்.
மாணவர்கள், நூலகப் புத்தகங்களைப் படிப்பதற்கு புல்வெளி, மற்றும் கல் பெஞ்சுகள் மற்றும் டேபிள்களை பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இவை போதுமான இடைவெளியில் அமைந்து இருக்கின்றன. இந்த இயற்கைச் சூழலுடன் அமைந்துள்ள நூலகம், மாணவர்களுக்கு மேலும் இனிமையைச் சேர்க்க, தலா ரூ.35 லட்சம் செலவில் இரு கூரைகள் போன்ற அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை நூலகத்திற்கு கூடுதல் ஈர்ப்பை தருகின்றன. இந்த கூரை போன்ற அமைப்பின் கீழ் 35 மாணவர்கள் அமர்ந்து படிக்கலாம். இந்த இடம் பாடம் குறித்த ஆலோசனை செய்வதற்கும், கூட்டாக சேர்ந்து படிப்பதற்கும் உதவுகிறது.
போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த இடத்தில் அமர்ந்து படிக்கும் போது கூடுதல் நேரம் படித்து, வெற்றி இலக்கை எட்டும் வாய்ப்பும் அதிகரிக்கும். அப்படி ஒரு ரம்மியமானச் சூழலில் இந்த நூலகம் அமைந்து இருக்கிறது.
****************
வாழ்க்கை இனிமையானது
வாழ்க்கை இனிமையானது வாழ்க்கையில் இனிமையாக உள்ள அனைத்து விஷயங்களையும் மூளை ரசிக்கிறது. நாம் ரசிப்பதற்கு உரிய திறனைப் பெற்றிருக்கிறோம். இன்றைக்கு நாம் அவசரயுகத்தில் இருக்கிறோம். பள்ளி, கல்லூரி வகுப்புகள் முடிந்ததும் அவசரமாக டியூசன் படிப்பை தொடர்வதற்கு ஓடுகிறோம்.
எனவே அழகு எங்கெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் ரசிக்கத் தவறுகிறோம். தெருக்களில் குப்பை இருந்தாலும் அதை உணர முடியாத அளவிற்கு நாம், அவசர கதியில் இயங்கிக் கொண்டு இருக்கிறோம். ஆலோசனைகளிலும் சிந்தனைகளிலும் அழகு உள்ளது. அதனை தொட்டோ சுவைத்தோ அல்லது கேட்டோ, அல்லது நுகர்ந்தோ உணர முடியாது இருப்பினும் அழகின் தன்மையை  உணர முடியும்.
அழகை ரசிப்பதற்கு நமது பணப் பையை திறக்க வேண்டியது இல்லை. நாம் நமது மூளையை பயன்படுத்தினால் போதுமானது. அழகு நம்மைச் சுற்றி எல்லா இடத்திலும் இருக்கிறது. அழகை நாம் பார்க்கவோ, கேட்கவோ முடியாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு  நிமிடமும் அழகானதுதான். அதனை நாம் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
******************

பயமே பலவீனம்
                         -    விவேகானந்தர்

விவேகானந்தரின் 150வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் இந்த 2013ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. விவேகானந்தர் 1863ம் ஆண்டு சனவரி 12ம் தேதின்று பிறந்தார். இவரது பெற்றோர் விசுவநாதர் - புவனேஸ்வரி. பெற்றோர் இவருக்கு வைத்தப் பெயர் நரேந்திரநாத். சிகாகோ மாநாட்டில் விவேகானந்தர் உரையாற்றிய போது எனது சகோதரர்களே, சகோதரிகளே என உரையை துவக்கி அமெரிக்க மக்கள் உள்பட உலக இளைஞர்களை தன் பக்கம் திரும்ப வைத்தவர்இளைஞர்களுக்கு அவர் அளித்த உறுதிமிக்க வார்த்தைகள் இதோ: ஒருபோதும் பயம் கூடாது. உங்கள் உடல், மனம், அறிவு இம்மூன்றையும் பலவீனமாக்கும் எதனையும் நஞ்சென்று ஒதுக்கிவிடுங்கள். அவற்றை மனதில் திணிக்காதீர்கள். வஞ்சனையால் எதையும் சாதிக்க முடியாது. அன்பாலும், உண்மையாலும் பெரிய செயலைக் கூட எளிதாகச் செய்துவிட முடியும்

பயமின்மையே வாழ்வின் ரகசியம். நமக்கு என்ன நேருமோ என்று ஒருபோதும் பயப்பட வேண்டாம். பிறரிடம் இருந்து வரும் உதவியை மறுக்கின்ற அந்தக்கணமே சுதந்திரம் வந்துவிடும். நியாயமான கோபம் என்று உலகில் இல்லை. ஏனெனில் அனைத்தையும் சமமாகக் காணத்தவறுவதால் கோபம் உண்டாகிறது. எண்ணங்களுக்கு நாம் உரிமை உடையவர்கள். நல்ல எண்ணங்கள் நம்மை நோக்கி வருவதற்காக உள்ளங்களை திறந்து வைப்பது நமது கடமை என்கிறார்.   

குறி தவறாத துப்பாக்கி

எந்தச் செயலுக்கும் உரிய பயிற்சி இல்லாதபோதும், மன ஒருமைப்பாடு இருந்தால் வெற்றியை, இலக்கை எட்டலாம் என்கிறார் விவேகானந்தர். ஒருநாள், துப்பாக்கி சுடும் களத்திற்கு விவேகானந்தர் வந்தார். அங்கே இருந்தவர்கள் பல நாட்கள் அங்கு பயிற்சிக்கு வருபவர்கள். அவர்களது துப்பாக்கிச்சூடு சரியான இலக்கை அடையவில்லை. பலமுறை சுட்டும் பலன் இல்லை. அதனை, மெளனமாக பார்த்துக் கொண்டிருந்த விவேகானந்தர் சிறிய புன்னகை செய்தார்

அருகே இருந்தவரிடம் துப்பாக்கியை வாங்கி சுட்டார். அதில் இருந்து புறப்பட்ட குண்டு இலக்கை குறி தவறாமல் துளைத்தது. அங்கே இருந்தவர்கள் அவரிடம் ஆச்சரியத்துடன் கேட்டனர் - நீங்கள் நீண்ட காலம் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுகிறீர்களா? என்று. விவேகானந்தர் அப்போது கூறுகையில் ஒருபோதும் இந்த பயிற்சியை செய்தது இல்லை, நீங்கள் குறிப்பிட்ட இலக்கை துப்பாக்கி குண்டால் துளைக்க வேண்டும் என மனதை ஒருமுகப்படுத்தினேன், இலக்கு தெளிவாக தெரிந்தது, சரியாகச் சுட்டேன் என்றார். பயிற்சி இல்லாவிட்டாலும் புதியத் துறையில் தீவிர கவனம், மன ஒருமைப்பாடு காட்டினால் வெற்றி பெறலாம் என அவர் சொன்னார். விவேகானந்தரின் இந்த வெற்றியின் ரகசியம், வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும்.

விவேகானந்தர் 1902ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி மரணம் அடைந்தார். அவர் இந்த பூமியில் வாழ்ந்த காலம் 39 வருடம் 5 மாதம் 24 நாட்கள். 
     MR. PREM KUMAR.
       
 ****************
           பார்வையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பேச்சு

    நமக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பேச்சாளரின் பேச்சு அமைந்திருக்க வேண்டும்

உங்களது எண்ணங்களை பார்வையாளர்களுடன் பகிர்ந்து     கொள்ளும் வகையில் பேச்சு அமைந்திருக்க வேண்டும்.பேச்சுக் கலையில் வல்லமை பெற்றவர், நல்ல பேச்சாளராக மக்களிடம் மதிக்கப்படுவார்
பேச்சுக் கலையை வளர்ப்பதற்கு முதலில் உங்களது நண்பர்களிடம் கருத்துக்களை சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். மிகவும் உற்சாகத்துடன் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் பல்வேறு தரப்பு மக்களுடன் கலந்து சுதந்திரமாகப் பேசுங்கள். நீங்கள் பேச்சாளராக உருவாகும் பட்சத்தில் உங்களுக்குள் புதிய நம்பிக்கை பிறக்கும்.

உங்களுக்கு முன்னால் அமர்ந்து இருக்கும் பார்வையாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்

ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்கு முன்பாக அதனைப் பற்றி  நன்கு ஆய்வு செய்து தகவல்களைத் திரட்டி அதன்படி பேசுங்கள் இப்படிச் செய்வதால் பார்வையாளர்கள் ஆர்வத்தை உங்களது பேச்சு தூண்டும்.

உங்களது பேச்சு மூலம் பார்வையாளர்கள் என்ன கற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிந்து, அதன்படி பேசுங்கள். உங்களது பேச்சு, பார்வையாளர்களுடன் கலந்துரையாடுவதைப் போலவே அமையட்டும். நீண்ட நேரம் மற்றும் விறு, விறுப்பு இல்லாத பேச்சை மக்கள் வரவேற்பது கிடையாது. பார்வையாளர்களை மிகவும் உற்சாகத்துடன் வைத்திருப்பது என்பது பேச்சாளருக்கு மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது

பேச்சாளர் தனது உரையின் இடையே பார்வையாளர்களிடம் கேள்விகளைக் கேட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

பேசும் போது, தற்போது உள்ள நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

*********************************************************
நம்மால் முடியும் தம்பி
பிளஸ் 2 மாணவர்களுக்கான 
வழிகாட்டி 
(
சி. . .  பள்ளி  மதுரை)
வெற்றிக்கான ஐந்து வழிகள்
                        1. தன்னம்பிக்கை 
                           2. மனஒருமைப்பாடு  
                              3. செயல்
                                                        4. திட்டமிடல்
                       5. இலக்கு

வழங்கியவர் சாமி தலைவர்,   சி. . .  பள்ளி, மதுரை.
மதுரை கோசாகுளத்தில் மத்திய கலால் அதிகாரிகள் சங்க பள்ளி(சி. . . ) உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வுகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் மகத்தான சாதனை படைத்து வருகின்றனர். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்ட இப்பள்ளி, இன்றைக்கு பல ஆயிரம் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய  வழிகாட்டி இருக்கிறது
டிசம்பர் 2, 2013 அன்று பள்ளியின் நூலக அரங்கில் 'நம்மால் முடியும்' என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி உரையை  சி. . . ஏ பள்ளி தலைவர். சாமி வழங்கினார். அப்போது, அவர் கூறியதாவது. ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு இலக்கு இருக்கும். அந்த இலக்கை அடைய வேண்டும் என்ற லட்சியம் மேற்கொள்வதே இலக்கு ஆகும். ஒரு காரியத்தை நீங்கள் செய்ய முடியும், நீங்கள் அடைய முடியும் நீங்கள் வெற்றி காண முடியும் என்பது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். 'வெற்றி' என்ற நிலைக்கு ஏதேனும் பார்முலா இருக்கின்றதா? நம் அனைவருக்கும் மிகச்சிறந்த அறிவுத்திறன் இருக்கிறது.
இன்றைய இளைஞர்கள் மிகச்சீரிய திறன் பெற்றவர்களாவும் இருக்கிறார்கள். ஒரு இலக்கை அடைவதற்கு 5 வழிகள் உள்ளன. இறுதி இலக்கான வெற்றியை எட்டுவதற்கு, மொத்தம் 5 சிறிய வழிகளை கடைபிடிக்க வேண்டும். இலக்கை அடைவதற்கு முதலில் 'தன்னம்பிக்கை' வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் இலக்கை அடைய ஏதேனும் ஒரு திட்டத்தை வைத்திருப்பார்கள். இலக்கை அடைய வேண்டும் என நினைப்பவர்களின் தற்போதைய நிலையில், அந்த திட்ட நிலைகளும், மாறுபட்டு இருக்கும். தினமும் 6 மணி நேரம் மட்டுமே தூங் வேண்டும் என, திட்டமிட்டால் அதன்படியே 6 மணி நேரம் மட்டுமே தூங்கி எழுந்து, நமது பாடங்களை படிப்பதற்கு திட்டமிட வேண்டும். குறிப்பிட்ட நேரம் மட்டுமே தூங்க வேண்டும் என்பதை, வெறும் எண்ணத்தில் மட்டுமே கருதாமல் செயலிலும் மேற்கொள்ள வேண்டும். எனவே இலக்கை அடைவதற்கு செயல் என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு 90 நாட்களே உள்ளன. அதாவது 3 மாத காலத்திற்குள் நல்ல முறையில் திட்டமிட்டு அதனை செயல்படுத்தி, மாணவர்கள் சாதனைகளை படைக்க வேண்டும். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு ஓவரும் குறையும் போது வெற்றிக்கான ரன்களை, குறிப்பிட்ட பந்துகளில் அடிக்க வேண்டும் என்ற, நிலை வீரர்களுக்கு வரும். அதே போன்றுதான் இந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு, 90 நாட்களில் வருகிறது. எனவே ஒவ்வொரு நாளையும், மாணவர்கள் வீணடிக்காமல், சாதனை  இலக்கை அடைய திட்டமிட்டு படிக்க வேண்டும். ஒரு செயலை செய்வதற்கு திட்டமிடுவதைப் போல அதனை செயல் படுத்துவதற்கு முயற்சியும் வேண்டும். மாணவர்கள் திட்டமிட்டபடி தங்களது செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பொதுத்தேர்வு எழுதக் கூடிய மாணவர்கள் பொதுவாக அதிகாலை 4 மணிக்கு எழுந்து படிக்க வேண்டும் என வீட்டில் கடிகாரம் அலாரம் வைப்பார்கள் அலார மணி அடித்ததும் சில மாணவர்கள் அலாரத்தை நிறுத்தி விட்டு, படிக்கும் முனைப்பு இல்லாமல் மீண்டும் தூங்க விரும்புவார்கள்  இது போன்று செயல்பட கூடாது.
 திட்டமிட்டபடியே செயல்படுத்த உரிய நேரத்தில் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் செயல் பட வேண்டும் என நினைப்பவர்கள், என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி செய்யும் செயலை தெளிவாகச் செய்ய வேண்டும். ஒன்றை தெளிவாக அறிந்து கொள்ள பல கேள்விகள் எழுப்ப வேண்டும். சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள தயக்கம் காட்டக் கூடாது.
நீங்கள் முழு திருப்தி அடையும்வரை நீங்கள் எடுத்த முயற்சியை கைவிடக்கூடாது. மாணவர்கள் தங்கள் இலக்கை அடைவதற்கு கவன ஒருமைப்பாடு என்பது மிக முக்கியமாகும். மனமும், ஆன்மாவும் நமது இலக்கை நோக்கியே இருக்க வேண்டும். மாணவர்கள் இந்த ஒரு மன ஒருமைப்பாட்டுடன் இருக்கும் போது, சுற்றுப்புறத்தில் ஏற்படக் கூடிய நிகழ்வுகள் ஏதும் அவர்களுக்கு இடையூறாக இருக்காது. மாணவர்கள் அதிகாலையில் படிக்கும் போது பேப்பர்காரர், பால்காரர், என பலர் வந்து போகும் ஒலிகள் காற்றில் கலந்து வரலாம். வீட்டில் உள்ளவர்கள் அதிகாலை நேரத்தில் பேசும் ஒலிகளும் கூட மாணவர்களை பாதிக்காத அளவில், தீவிர மன ஒருமைப்பாட்டைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
இந்த மன ஒருமைப்பாட்டை எட்டுவதற்கு முதலில், ஏதேனும் வடிவத்தை அல்லது விருப்பமான வழிபாட்டு உருவை மனத்தில் சில நிமிடங்கள் நினைக்க வேண்டும் என்கிறார்கள்இத்தகைய பயிற்சியில் பக்குவம் பெறும்போது தியான நிலை எட்டப்படுகிறது அதைப் போன்றுதான் மாணவர்கள், தங்களது பாடங்களை படிக்கும் போது, மன ஒருமைப்பாட்டுடன் அதில் ஆழ்ந்து கவனம் செலுத்த வேண்டும் அப்படி படிக்கும் போது, அவர்களை சுற்றி எழுகின்ற எந்த ஒரு ஒலியும் அவர்களை பாதிக்காது. படிக்கும் பாடங்களை பிறகு படிக்கலாம் என ஒத்திப் போடும் மனநிலை கூடாது.
மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரும் போது ஒரு கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டும் என, அனைவரும் ஒரே நிறத்திலான சீருடை அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களில் யாரும் ஏழை, பணக்காரர் என்ற பேதம் கிடையாது. இங்கு அனைவரும் சமம் என்பதையே வலியுறுத்தும் கோட்பாடுதான் சீருடை. அந்த சீருடையுடன் காலில் கறுப்பு நிற ஷீவையும் அணியச் சொல்வது உண்டு. இந்த 'ஷீ' வாங்கும் போது பளபளப்பாக, நல்ல கறுமையுடன் இருக்கும் ஆனால் அதனை பயன்படுத்தும் மாணவர்கள் முறையாக பராமரிக்காத சூழலில் அது பல்வேறு நிறங்களை பெற்றிருக்கும். ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வரும் போது 'ஷீ' வை நன்கு பாலிஷ் செய்து போட்டுக் கொண்டு வரும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இந்த ஒழுங்கு முறை மனநிலையை நன்கு செம்மைப்படுத்தும். இது போன்ற அடிப்படை ஒழுங்கு எல்லா பள்ளிகளிலும்  மாணவர்களிடம் வெளிப்படும். இதன் மூலம் அவர்களது செயல்கள் அனைத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். வாழ்க்கையிலும் அவர்கள் சாதனை படைப்பவர்களாக உயர்வார்கள்.
மாணவர்கள் தாங்கள் அடைய வேண்டிய திறனை எட்டுவதற்கு தினம்தோறும் தொடர் பயிற்சி  மேற்கொள்ள வேண்டும். நீங்கள் யாரேனும் 100 சதவீத மன ஒருமைப்பாட்டுடன் பணியில் ஈடுபட்டால், நீங்கள் கடவுளுக்கு அருகே இருக்கிறீர்கள்என்கிறார் விவேகானந்தர். நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் முழுமையான மன ஒருமைப்பாடு தேவை.
உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள் தன்நம்பிக்கைதான் மிகவும் முக்கியம். காட்டு விலங்குகள் 5 அறிவு கொண்டவையாக இருக்கின்றன. அவற்றிற்கு ஒவ்வொரு நாளும் எங்கே உணவு தேட வேண்டும் என்பது கூட தெரியாது. மனிதர்களுக்கு மட்டும் தான் பகுத்தறியும்  6 வது அறிவு உள்ளது. ஆதனால் உயரம், நல்ல குண்டு, கறுப்பு, சிவப்பு, குறிப்பிட்ட இனம் என தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. இவையாவும், நாம் நினைத்து அல்லது விருப்பப்பட்டு நாமே நமக்கு அமைத்துக் கொண்டதல்ல. இயற்கையாக அதுவாக அமைந்தது ஆகும். எனவே அத்தகையவற்றை நினைத்து தாழ்வு மனப்பான்மை கொள்ளக் கூடாது. தன்னம்பிக்கையும், மன ஒருமைப்பாடும் வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளங்கள் ஆகும்.
ஒரு உண்மை  நிகழ்வு:
 இரண்டு கையும், இரண்டு காலும் இல்லாத மனிதர் தரையில் விழுந்து, மீண்டும் தலையால் எழுந்து நிற்கும் தன்னம்பிக்கை காட்சியை பார்க்க நேர்ந்தது. அந்த மனிதர், தனது குறைகளை பற்றி கவலைப்பட்டு முடங்கி போகாமல் எழ வேண்டும் என்ற முயற்சிகளை விடாமல் செய்து வெற்றியும் பெறுகிறார். மனம் தளராமல் நாம் 100 முறை மீண்டும், மீண்டும் முயற்சிப்போம் என அந்த மாற்றுத்திறனாளி, மன உறுதியுடன் சொல்கிறார். அவர் சொல்வதை போல, நாம் மேற்கொள்ளும் செயலில் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். அந்த செயலில் இலக்கை, அடையும் வரை நமது முயற்சியைத் தொடர வேண்டும். தன்னம்பிக்கை உங்களிடம் இல்லை என்றால், நீங்கள் ஆயிரம் கடவுளை வணங்கினாலும் உங்களை ஒரு கடவுள் கூட காப்பாற்றாது என விவேகானந்தர் கூறுகிறார். நம் மீதும், நம் திறமை மீதும் நம்பிக்கை தேவை. நம்மால் முடியும். நேரம் தவறாமை வெற்றிக்கு வழி வகுக்கும். ஒரு செயலில் வெற்றி பெற தன்னம்பிக்கை மற்றும் உழைப்பு மிக அவசியமாகும்.
நீங்கள் செல்லும் வழியில் பல தடைகள் இருக்கலாம். இருப்பினும் நீங்கள் செய்யும் செயலில் இருந்து தடம் புரளக் கூடாது. 1992 ம் ஆண்டு ஸ்பெயின் பாசிலோனாவில்  உலக நாடுகள் கலந்து கொண்ட ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் டெரக் ரெமான்ட் என்ற வீரர் கலந்து கொண்டார். அவர்தான் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் இருந்தது. போட்டியில் கலந்து கொண்டு அதிவேகமக அவர் முந்தி சென்றார். 150 மீட்டர் தூரம் வரை, அவர் வேகமாக ஓடிக் கொண்டிருந்தார். திடீரென அவருக்கு தசைபிடிப்பு ஏற்ப்பட்டு காலில் கடுமையான வலி ஏற்பட்டது. அதன் பின்னர் அவரால் நிச்சயம் வெற்றியை எட்ட முடியாது என்பது தெரிந்தது. இருந்தாலும் அந்த வீரர் தனது இலக்கு தூரத்தை எட்டி விட வேண்டும்என கண்ணீருடன் காலை நொண்டிய  படி வந்து கொண்டிருந்தார். கடுமையான வலியுடன் அவர் ஓடுவதை கண்டு, பொறுக்க முடியாத அந்த வீரரின் தந்தை ஓட்டத்தை நிறுத்த கூறினார். ஆனால் அந்த வீரர் கேட்க வில்லை. பின்னர் தனது தோளை பிடித்து கொண்டு வா என தந்தை வெற்றி இலக்கு கோடுவரை வந்தார். அவர் வெற்றி பெறாவிட்டாலும் இலக்கு தூரத்தை அடைந்த போது, அரங்கத்தில் இருந்த 65 ஆயிரம் பார்வையாளர்கள் எழுந்து நின்ற அந்த வீரரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர். மறுநாள் அவரைப்பற்றி உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகளும் புகழ்ந்தனர்.
நீங்கள் ஒரு செயலில் வெற்றி பெறாவிட்டாலும் உங்களது முயற்சியை ஒருபோதும் கைவிடக் கூடாது இதைத் தான் அந்த வீரரும் செய்தார். அவரது விடாமுயற்சிக்கு இந்த உலகமே தனது பாராட்டை தெரிவித்தது. எந்த சூழ்நிலையிலும் முயற்சியைச் கைவிடாதீர்கள்
நாம் தான் முதல் கதாநாயகன் என்ற உங்கள் மீதான நம்பிக்கை இருக்கட்டும். “விழித்திருங்கள், எழுந்திருங்கள், இலக்கை எட்டும் வரை தொடர்ந்து போராடுங்கள் என்று விவேகானந்தர் கூறுகிறார். பிளஸ் 2 பொதுதேர்வு எழுதும் மாணவர்கள் இன்னும் இருக்கின்ற 90 நாட்களில் தங்களது பாடங்களில் தீவிர கவனம் செலுத்தி, திட்டமிட்ட மதிப்பெண்களை குவிக்க வேண்டும். மன ஒருமைப்பாடு, தொடர் பயிற்சி ஒழுங்கு முறை இருந்தால் நீங்கள் நினைத்த மதிப்பெண் இலக்கை பெறலாம். நீங்கள் நினைக்கும் உயர் கல்வியில் சேர முடியும்.
 இன்றைக்கு சாதாரண நடுத்தர மக்கள் கூட விமானத்தில் பயணம் செல்லும் நிலை இருக்கிறது. இந்த விமானத்தை ரைட்சகோதரர்கள் கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்த போது, கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார்கள். மனிதன் பறக்க முடியுமா! விமானம் பறக்குமா? என்ற ஏளனம் இருந்தது. பலரும் விமர்சித்தார்கள். ஆனால், அவர்கள் அதைப்பற்றி கவலைப்பட வில்லை. தொடர்ந்து முயற்சித்தார்கள். விமானத்தை வானில் பறக்க விட்டு சாதனை படைத்தார்கள். அவர்களது தொடர் முயற்சி இன்றைக்கு, அவர்களை மகத்தான சாதனையாளர்களாக ஆக்கி இருக்கிறது. இலக்கை அடையும் வரை முயற்சியை கைவிடாதீர்கள். தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருங்கள். கஜினி முகமது என்ற மன்னனைப்பற்றி உங்களுக்கு தெரியும் 16 முறை போரில் தோல்வியைத் தழுவினார். இருப்பினும் அவர் தோல்வியைக் கண்டு துவளவில்லை.
மன உறுதியுடன் 17 வது முறை போரிட்டார் வெற்றியை பெற்றார். இறுதியில் அவர் நினைத்த வெற்றி அவரது கைகளில் வந்து சேர்ந்தது. இந்த நிகழ்வு அவரது விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியை காட்டுவதாக இருக்கிறது. பலமுறை கஜினி முகமது தோல்வியை தழுவியதால் சோர்வடைந்திருந்தால் இறுதியில் வெற்றியடைய பெற்று இருக்க முடியாது தோல்வியடையப் பெற்ற காலங்களில் அவர், தீவிரமான யோசனையில் இருந்த போது கூடு கட்டும் சிலந்தி பலமுறை, கீழே விழுந்தாலும் முயற்சியை விடாமல் வலையை பின்னுவதைப்  பார்த்தார் பலமுறை, வலையை பின்னுவதில் பின்னடைவு இருந்த போதும், அந்த சிலந்தி இறுதியில் அருமையான வலையை பின்னி முடித்ததைப் பார்த்தார். அந்த சிலந்தியின் விடாமுயற்சி, கஜினி முகமதுவையும் தொற்றிக் கொண்டது. 17 வது முறை படையெடுத்தார் வெற்றியை எட்டினார்.
அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா. அவரது பிரச்சாரத்தின் தாரக மந்திரம்எஸ் வீ  கேன் (நம்மால் முடியும்) என்ற நம்பிக்கை முழக்கம்தான். கறுப்பர் இனத்தை சேர்ந்தவர். எனக்கு வெற்றி கிடைக்காது என ஒபாமா கருத வில்லை அவரது மன உறுதி தன்னம்பிகையால் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்தலில் ஒரு முறை அல்ல, இரண்டாவது முறையும் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தொடர்ந்து நீடிக்கிறார்.
முயற்சியை கைவிடாதீர்கள்
வெற்றி உங்களுக்கு தான்…..
       தொகுப்பு : எஸ். பி. கே
வெற்றிக்கான ஐந்து வழிகள்
***********

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.